ஆடிகள்















காட்சிகளும் கோணங்களும்
மாறியபடியே இருக்கும்
ஆடியொன்று வைத்திருக்கிறேன்
நானும்

பிரம்மம் தன் முகம்பார்த்து
இருப்பென எழுந்துவரும்
சின்னஞ்சிறு குழியாடி

காலத்தில் பின்னோக்கி நகரவும்
கனவுகளில் முன்னோக்கி புனையவும்
கூடிய குவியாடி

பூவுக்குப் பூவையும்
புன்னகைக்கும் அதையேதான்
திருப்பிக்காட்டும்
எளிய கண்ணாடிதான் என்றாலும்
காட்சிகளை மறைத்துக்கொள்ளும்
கள்ளத்தனமும் பழகியதுதான்

ஒரு சொல்லுக்குச் சிதறி
ஒரு புன்னகைக்கு மீண்டும்
புதியதாய்ச் சேரும் மாயக்கண்ணாடி

யாரும் வந்து எதையும்
வரைந்துவிட்டுப் போகும்படி நிற்கும்
நிலைக்கண்ணாடிதான் - ஆனாலும்
நான் காட்சிகளை சேமித்துவைக்கும்
கண்ணாடிக் கருவூலமும் அதுவேதான்

இந்த ஆடியில் விழும்பிம்பம்
நிலைப்பிம்பம்
காலத்தில் பின் அதுவே
நீர்ப்பிம்பமும்

வரைந்துப் பார்க்கவே
வண்ணங்களை சேர்க்கும் அது
வாழ்ந்து தீர்க்கவே
ரசமிழந்தும் போகிறது

தூரத்தையும் காலத்தையும்
தொலைவுவரை பார்க்குமென்றாலும்
தன் முகத்தை அதிலே
பார்த்துக்கொள்ள மட்டும்
தயங்கியபடியேதான் நிற்கும்.


நன்றி : சொல்வனம்



கண்ணாடிச் சாளரம்














சோழகக்கொண்டலின் கண்ணாடிச் சாளரம் வாழ்வின் வண்ணங்களை அதன் மாயம் கெடாத புதிர்த்தன்மையுடன் விரித்துக் காட்டுகிறது. 
                                                                        -பதாகை 

கம்பிகள் இன்னும் சூழாத
கண்ணாடிச் சாளரம் ஒன்று
எனது வீட்டின் சுவற்றில்
இருக்கிறது

மழைக்கு வேர்க்கும் வெளிப்புறமும்
மழை நின்றும் குளிரும்
உட்புறமும் கொண்டு
உள்ளீடற்ற வெளியால் பிரிந்த
இரட்டைக் கண்ணாடிகளால் ஆன
மாபெரும் சாளரம் அது

ஒன்றையொன்று கவிழ்ந்து
அடைகாக்கும் வானவில்களும்
ஒன்றையொன்று துரத்தி
அலைக்கழியும் மேகங்களும் கொண்ட
வானங்கள் அதில்
வரையப்படுகின்றன

பருவங்கள்தோறும் நிறம் மாறும்
கண்ணாடிகள் வழி
கண்காணிக்கின்றன
ஓராயிரம் கண்களோடு
ஒளிரும் இரவுகளும் சூரியன்களும்

காலங்கள் மாறும்தோறும்
உரித்து ஒட்டப்படுகின்றன
புதுப்புது ஓவியங்கள்

இன்னும் திரையிடாமல்
திறந்தே வைத்திருக்கிறேன்
அந்த சாளரத்தை

ஒளியும் இருளும்
உள்நுழைய இருக்கும்
ஒற்றைவழி அதுதானே
என் வீட்டிற்கு.

நன்றி : பதாகை   
   

கடைசிக் கனவு





















இலக்கின்றி
எல்லையுமின்றி
மிதந்து மிதந்தேறி
மெல்லப் பறக்கிறேன்
சூரியன் சென்று மறைந்த பாதையில்

காத்திருக்கும்
பொறுமையற்ற மனம்
காற்றில் சருகாய் அலைகிறது
விடியல் கூடாத திசைகளில்

நான் ஏங்கியலைந்த
பூக்களெல்லாம்
பழுத்துக் கிடக்கின்றன
தூங்காது கிடந்து
துரத்திய இலக்குகள்
காலாவதியாகிவிட்டன

ஏற்றிவந்த இறகுகளையும்
எண்ணி எண்ணி
உதிர்க்கிறேன்

கற்று வந்த எதையும்
கசந்து காற்றில்
கரைக்கிறேன்

தூரத்து திசைகள் எங்கிலும்
துளி நீலமும்
எஞ்சவில்லை

இருண்டு சூழ்கிறது
எல்லா திசைகளிலும் வானம் -
ஒளி மிஞ்சாத வானில்
நிறம்தான் ஏது?
கண்களும்தான் எதற்கு?

வலித்து சிதையும்
சிறகுகளுக்கு
வாழ்வின் தூரம்
முடிவிலியென சலிக்கிறது

என் மோட்சத்திற்கான மரத்தடி
இந்த வாழ்வின் பாலையில்
எங்குதான் இருக்கிறது?

எத்தனை இனியது மரணம்
கைகளில் கொண்டுவந்தும்
கடைசிவரை திறக்க முடியாத
பரிசுப்பெட்டி

எத்தனை அரியது மரணம்
யாருக்கும் கிடைப்பதில்லை
இரண்டாம் வாய்ப்பு

மீண்டும் மீண்டும்
இறக்கும் இன்பதிற்காகவா
மீண்டும் மீண்டும்
பிறக்க வருகிறோம்?

இலக்குகள் ஏதும் தெரியவில்லை
எஞ்சிய இறகுகளும் உதிர்ந்து
இருளுக்குள் விழுகின்றன
என்ன செய்ய?

இனி நான்
விழித்துக்கொண்டு வீழ்வதா ?
ஆழ்துயில் கொண்டு மீள்வதா?

 
நன்றி : திண்ணை

உள்ளிருந்து உளவுபோதல்

















உளக்காட்சிகளை வெளிப்படுத்தும் சொற்தேர்வுகளில் தனித்துவ பாணியை கொண்ட கவிதைகளை எழுதிவரும் சோழகக்கொண்டல் இவ்வாரம், தன்னிடமிருந்து தனிமையை யார் மீட்டுத்தந்தாலும் எஞ்சுவது தனிமைதான் என்பதை தவிப்போடு சொல்கிறார்.
- பதாகை 


என்னிடமிருந்தே
என் தனிமையை மீட்டுத்தரும்படி
நான் கேட்பதற்கு யாருமில்லை

யார் மீட்டுக்கொடுத்தாலும்
எஞ்சுவதை தனிமையென்று
நம்புவதற்கில்லை

உயிரின் ஆழத்தைத் தொட்டு
ஒரு துளி கண்ணீரோடு வெளிவரும்
கவிதையை வாசிக்கையில்
உலரும் கிளை விட்டு
உதிரும் இலையென
மனம் நழுவும் கணத்தில்
‘ஆகா! கவிதை வாசிக்கிறாயா?’
என்று கேட்பது யார்?

நின்ற இடம் மறந்து
நெஞ்சு நெகிழ்ந்து
உருக்கும் ஒரு இசை நதிக்குள்
உள்ளிறங்கிப் பாயும் நொடியில்
‘என்னே ஒரு ரசனை ?’ என்றபடி
என் பிடரியைப் பிடித்து இழுப்பது யார்?

கனிச்சுமை தாளாது
வளையும் கொடி கண்டு
கால் நடுங்கும் விசையோடு
காமம் திரண்டு
கண்களுக்கு வரும் பொழுதில்
‘இத்தனை மட்டமானவனா நீ ?’
என்று என் கழுத்தைப்பிடித்து திருப்புவது யார்?

கரைதலுக்கு எதிரான
இந்த கவனத்தைக் களைந்துவிட்டு

என்னிடமிருந்தே
என் தனிமையை மீட்டுத்தரும்படி
நான் கேட்பதற்கு யாருமில்லை.

நன்றி : பதாகை


மதுவற்றவனின் இரவுவிடுதி



"குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஓசை நயமும் கற்பனை வளமும் கொண்ட கவிதையை  எழுதியிருக்கிறார் சோழகக்கொண்டல்"
                                                                      - பதாகை 


--- கோப்பைகளின் கதை ---
என்னிடம் மூன்று
காலி மதுக்கோப்பைகள் இருக்கின்றன

எப்போதுமே மதுவின் ஈரம் பட்டிராத
கருங்கல்லால் செய்த
காந்தியின் கோப்பை ஒன்று

நிரம்பி நிரம்பியே
நிறம் மங்கிப்போன
தங்கத்தால் ஆன என்
தந்தையின் கோப்பை ஒன்று

எப்பொழுதோ விழுந்து உலர்ந்த
மதுவின் கறையோடு இருக்கும்
மண்ணால் செய்த என்
சொந்தக் கோப்பை ஒன்று

என் லட்சியவாதத்தின் முதுகெலும்பில்
காந்தியின் கோப்பை இருப்பதை
யாரும் நம்புவதில்லை

தீராத வேட்கை சுழலும் இரத்தத்தில்
ஒரு தங்கக்கோப்பை
காலியாக இருக்கும் என்பதை
என் தந்தையும் நம்புவதில்லை

மது கரைபுரண்டோடும்
மணல்வெளியில் எனது
மண்கோப்பை பத்திரமாய் இருக்கிறதென்பதை
என்னாலும் நம்பமுடிவதில்லை.

--- இலட்சியவாதப் பூனை ---

கோடைத் தொடங்குகிறது
குளிர்மதுப் புட்டிகள் குவிகின்றன
‘வாப்பு’ வை வரவேற்று
கோப்பைகள் நிறைகின்றன

நனையாத கோப்பைகள் கொண்டதால்
இந்தியனுக்கும் அன்னியனாய் நான்
வீதிகள்தோறும் உலரும் கோப்பைகள்
விடுதிகள் தேடி உருள்கின்றன வாரக்கடைசியில்

மூன்று கோப்பைகளை
முதுகின்மேல் தாங்கியபடி
கண்களைக் கட்டிக்கொண்டு
கம்பிமேல் நடக்கும் பூனைபோல் இருக்கிறேன்
என்று நண்பன் வந்து சொல்லிவிட்டுப் போனான்

நீ பழிக்கும் இந்த கடலின் மீது
மிதப்பதற்காகவே செய்யப்பட்டது
நீச்சலுக்கு பயந்து நீ நிற்கும்
அந்த இலட்சியவாதப் படகு

கடலின் சுழியும்
கவிழ்க்கும் காற்றும்
உறையும் குளிரும் உணராமல்
ஒருபோதும் அடைய முடியாது
கரைசேரும் உத்தியை உறுதியை.
என்றான்.

நான் குதிக்க விரும்பாத
கடலின் குளிர் சுழன்றடிக்கிறது  
என் கோப்பைகள்  இருக்கும் அலமாரியில்.

கதவுகளை அறைந்து சாத்திவிட்டு நடக்கிறேன்
அவனோடு இரவு விடுதிக்கு.


--- இரவு விடுதி ---

இரவின் திரையில்
எழுந்து நெளிகின்றன
நினைவழிக்கும் பாம்புகள்

தலைதொங்கி தவழும் மழலையென
நிறைந்து சரிகின்றன கோப்பைகள்
விஷமேறிய நாக்குகளில்
குழைந்து உடைகின்றன மொழிகள்

வீதியில் எங்கும் செயலற்று கிடக்கும் குளிர்
எனக்கு மட்டுமே எஞ்சி ஏறுகிறது
விடுதிகள்தோறும் காவல்புரியும் துவாரபாலகர்களிடம்
யாசித்து வரிசையில் நிற்கின்றன
இன்னும் இடமிருக்கும் கோப்பைகள்

நியாயத்தீர்ப்பு கிட்டிவிட்டது
நீந்திப்பாய்கிறோம் இருளுக்குள்
இடி இடியெனும்  இசையில்
நெடிதுளைக்கும் புகையில்
குடிகுடியென கூவியழைக்கிறது
ஒரு விஷத்தீ வெடித்தெரியும் யாகம் 
 
நான் அஞ்சியஞ்சி கால்நனைக்கும் கடலில்
தாவிவிழுந்து நீந்துகிறான் நண்பன்
நடன அரங்கில் நடப்பதைப்போல் அவமானமிது என்று
பிடித்துத் தள்ளுகிறான் பின்னாலிருந்து அவனே

உடைகள் தளர்கின்றன
உன்மத்தம் கொள்கின்றன கண்கள்
உலர்ந்து வலிக்கிறது  நாக்கு
மோதி மீள்கின்றன மென்மார்புகள்
இழுத்து இடைகோர்க்கும் கைகள்
பிண்ணிப் பின்வாங்கும் கால்கள்

நான் வலிந்து நீந்தினாலும்
வழுக்கி உள்வாங்குகிறது கடல்
என்னைவிட்டு

உலர்ந்த கோப்பை இதில்
ஒருபோதும் நீந்த முடியாது
என்று தெரிந்தபின்
வெளியேறி நடக்கிறேன்
விடுதியைவிட்டு.


நன்றி : பதாகை