கவிதை எனும் வேதாளம்

முடிவிலியென உறைந்திருக்கும்  
காத்திருப்பின் அலமாரியிலிருந்து
சட்டென இன்று
தனித்துத் தெரியும்
ஒற்றைப் புத்தகத்திற்குள்
குவிந்து விழுந்தெழுந்து மனம்
கொத்திக்கொண்டுவரும் ஒற்றைவரியில்
எஞ்சியிருக்கிறது
ஒரு வேதாளத்தின் கைவெப்பம்

அந்த வெப்பத்தில் வேர்விடுகின்றன
எப்போதோ விழுந்த விதைகள்,
முளைவிடுகின்றன குருதியும் கோழையும் வடியும்
உதிரிச்சொற்கள்  

மெல்ல மெல்ல உறக்கத்தில் நழுவும்
நள்ளிரவில் கவனித்தால்
யாரோ யாரையோ முத்தமிடும் காட்சி
மனதின் எல்லாப் பக்கங்களிலும்
வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது

எந்தபெண்ணோ நிராகரித்து
வீதியில் வீசிவிட்டுப்போன ஒரு பூவின்மீது
வண்டிச்சக்கரம் ஏறி நசுக்கும்
‘சதக் சதக்’ சத்தம்
நிகழ்ந்து நீண்டுகொண்டே இருக்கும் காலத்தின்
ஒவ்வொரு கணப்பிரதியிலும் ஒலிக்கிறது

பழுக்கக்காச்சிய கம்பியின்மீது வந்தமரும்
பட்டாம்பூச்சிகளைப்போல
உதிக்கும் சொற்களெல்லாம்
உதிர்ந்து விழுகின்றன

சற்றும் தளராத மனம்
தனித்து நடக்கத் தொடங்குகிறது
சூரியன் உலவாத இடமோ காலமோ நோக்கி

இருள் வழியும் மரக்கிளையில் எங்கோ
தலைகீழாகத் தொங்கும் வேதாளம்
மௌனம் குவியும் ஒரு கணத்தில்
மெல்ல மண்டைக்குள் புகுந்துகொண்டு
எனக்காக முன்வைக்கிறது
ஒரு புதிர்க்கேள்வியை

ஆரத்தழுவும்
ஆயிரம் கணங்களில் ஒரு கணத்தில்
காதல் பழுத்துதான்
காற்றோடு போகிறதா இலை,
வெறும் காலம் முடிந்தா?
என்று.

கேள்வியின் கனம் தாங்காது அதை
கிறுக்கி வைக்கிறேன் காகிதத்தில்
உயிர்கொண்டு நெளிகிறது
ஒவ்வொரு வரியும்

மௌனம் கலைந்ததென்று
மறைந்துவிட்ட வேதாளத்தைத்தேடி
மீண்டும் நுழைகிறேன்
மனவெளியின் அடர் இருளுக்குள்.

-----
நன்றி : சொல்வனம்

ஞானத்தெருநாய்














வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.

---
நன்றி : பதாகை