தனிமையின் தேநீர்விருந்து

















" தனிமையின் பாடகன் சோழகக்கொண்டல் கவிதைகளில் இவ்வாரம், தனிமையின் தேநீர் விருந்து. கவிஞர் அருந்துவது தேநீரா கண்ணீரா என்று தெரியவில்லை- சீனாவில் கசப்பை உண்டு இனிப்பைச் சுவை என்றொரு பழமொழி இருப்பதாகக் கேள்வி. சோழக்கொண்டல் கவிதைகள் கசப்பில் இனிப்பு கரைந்த கலவை. இவ்வார தேநீர் அதன் இன்னொரு சான்று."


- பதாகை 22 ஜூன் 2015

பின்னிரவிலும் அணைக்கப்படாமல்
விளக்கெரியும் ஜன்னல்களுக்குப் பின்னே
விழித்திருக்கிறது தனிமை


எட்டிவிடமுடியா ஆழம்கொண்ட
அதன் தேநீர்கோப்பையை
பகிர்ந்து பகிர்ந்து பருகியபடியே
தனிமையை தக்கவைக்கின்றன
முகிழா காதலும்
முயலா காமமும்
முந்தையநாள் சோறும்
மூப்பும் பிணியும்


சாக்காடு படிந்திருப்பதோ
சர்க்கரையோடு அடியில்
இனிப்புக்கு ஏங்கி
எத்தனை பருகினாலும்
இறங்குவதாய் இல்லை
தேநீர்மட்டம்


இளமை மிச்சமிருக்கும் ஜன்னல்களுக்குப் பின்னே
மதுப்புட்டிகள்
இன்னும் சில ஜன்னல்களுக்குப் பின்னே
மருந்துப் புட்டிகள்


திறந்துதான் இருக்கும்
ஜன்னல்களைவிட்டு
வெளியே நிற்கிறது காற்று
உள்ளேயே உறைந்துவிட்டது காலம்
இவை ஒன்றையொன்று
தொடவும் கரையவும் இயலாதபடிக்கு
திரையொன்றை இட்டுவிட்டு
பொய்ப்பாலம் கட்டுகிறது
இமைக்காமல் எரியும் விளக்கு


அந்த அணையாவிளக்குகள்   
எரிக்கும் அறைகளுக்குள்ளே
உறக்கம் நுழைய முடியாதபோது
எஞ்சியிருக்கப்போவது
வெக்கையும் ஈரமும் சேர்க்கும்
பெருமூச்சும் கண்ணீரும் மட்டுமே.

-----

நன்றி : பதாகை

No comments: