எனக்குள் நிகழும் இரவு















எனக்குள்
நிகழ்ந்தபடியே இருக்கிறது
ஒரு இரவு

நிலவுகள் மீன்களின் நிச்சயமில்லாமல்
நிகழ்ந்தபடியே இருக்கிறது
ஒரு நீண்ட இரவு

விடியல்களின் சூரியன்களை
விழுங்கியபடி
திரண்டுவரும் மேகங்களை
சூடியபடி
குளிர்ந்து உறைந்து
இறுகியபடி
அது வளர்ந்துகொண்டே இருக்கிறது

இச்சையின் வெப்பத்தில் துளிர்த்து
இருளுக்குள் காமத்தில்
சூல்கொண்ட
கணம் முதலே
எனக்குள் நுழைந்து கொண்டதுதான்

நான் சிரிக்கும் கணத்தில்
கடைசியாகத் தெரியும்
கோரைப்பல்
அந்த இரவின் நிழல்தான்

நான் உடைந்தழும்போது விழும்
முதல் துளி நீர்
அந்த இரவின்  மழைதான்

என் துணை கலைத்திருக்கும்போதும்
தூங்காமல் இயங்குவது
அந்த இரவின் மிருகம்தான்

ஒரு தும்மலுக்கும்
கலங்கி வழிவது
அங்கிருக்கும் ஈரம்தான்

உயிர்த்திருப்பதின் செலவுக்கென
நான் தேக்கிவைத்திருக்கும்
புன்னகையும் கண்ணீரும் எல்லாம்
அந்த இரவின் விளைச்சல்களே

மேலாடைச் சரிவின்
மெல்லிய பிளவு கண்படுகையில்
சட்டென சூழ்ந்து கொள்கிறதா
ஆயிரம் தவளைகள்
மழை மழை என கதறும் ஒலி

அப்படியானால்
உங்களுக்குள்ளும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது
ஒரு அடர்ந்த இரவு.


நன்றி : பதாகை


No comments: