தொடரகம் – நானும் காடும்













ஒரு காடு
ஒரு மிருகம்

தானே அழித்த காட்டை
தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம்

தன்னை வெளிப்படுத்த
தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு

தான் எப்போதும் பார்த்திராத
ஆனால் எப்போதுமே போக விரும்பும்
தனக்கான காட்டில் மிருகம்
காலத்தின் சாம்பலை குழைத்து
இறந்த காட்டின் அழகைப்போல
இல்லாத காட்டில் வரைந்து பார்க்கையில்

மிருகத்திற்குள் இருக்கும் காடு விழித்துக்கொண்டு
காட்டிற்குள் இருக்கும் மிருகத்தோடு எரிகிறது

வெளிப்பாயும் தீச்சுட்ட மிருகம்
தன் அந்தரங்கப்புண்ணை நாவால் தடவியபடி
காட்டை நினைவில் கொண்ட
எல்லாவற்றையும் வேட்டையாடி
காட்டைத் தின்கிறது

பிழைத்த மிருகம் ஒவ்வொன்றிலும்
தனித்தனியே இருக்கும் காடுகளில்
பசி காமம் எனும்
இரண்டே பருவங்கள்

போக விரும்பிய காட்டில் மிருகமும்
பிரிந்து போன மிருகம் நீங்கிய காடும்
தனிமையில்

மரணிக்க அஞ்சி காட்டையே தின்ற மிருகத்தை
காடு தின்று பூக்கிறது
காமத்தின் துளிவழி
மிருகமும் எஞ்சிப்பிழைக்கிறது

பசிக்கு மீண்டும் காடு
காட்டுக்கு மிருகம்.


நன்றி : திண்ணை 


No comments: