ஞானத்தெருநாய்














வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.

---
நன்றி : பதாகை

No comments: