Showing posts with label வேனில். Show all posts
Showing posts with label வேனில். Show all posts

உலர்ந்துருகும் வேனில்



இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்கியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.


----------
நன்றி : பதாகை